Archive for the ‘பட்ஜெட்’ Category
Gross Domestic Politics
சவுபிக் சக்ரப்ர்தியின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்தி, காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கையாலாகத தனத்தினைப் பற்றி பேசுகிறது. பல்வேறு கூறுகளில் நான் சக்ரபர்தியோடு ஒத்துப் போகிறேன். முக்கியமாக, 4 ஆண்டுகள் பொருளாதார சூழல் நன்றாக இருந்த போது, போதுமான அளவிற்கான நிதியறிவோடு (fiscal prudence) இருந்திருந்தால், இப்போது இந்தளவிற்கு நிதி பற்றாக்குறை வந்திருக்காது. இதையே தான் எகனாமிக் டைமிஸின் பத்தியும் பேசியிருக்கிறது. நிதி பற்றாக்குறை தான் இன்றைக்கு உலகமெங்கும், பொருளாதார மந்தத்திற்கு எதிராக இடைக்கால ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உண்மையாக இருந்தாலும், சரியான கவனிப்பு இல்லாமல் போனால், அர்ஜெண்டினிய பாதிப்பு போல நமக்கும் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.
தேர்தல் வரும் காலம் பார்த்து போன பட்ஜெட்டில் (இடைக்கால பட்ஜெட்டில் அல்ல) அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேளாண்மை, அரசு அலுவலகர்கள், ராணுவம் என வாரி வழங்கினார். இரண்டு ஊக்கத்திட்டங்களுக்கு (stimulus package) பின்னும் பொருளாதாரம் காற்று வாங்குகிறது. இன்றைய எகனாமிக் டைம்ஸின் தலையங்கத்தில் இந்தியாவின் நிதி பற்றாக்குறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு இருக்கிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஆளும் மத்திய அரசினை சார்ந்தது. ஆனால், அப்போதெல்லாம் கவனிக்காமல், கடைசி சமயத்தில் உலக பொருளாதார மந்த நிலையின் மீது பழி போடுவது என்பது கையாலாகததனமேயொழிய வேறில்லை.
இத்தகைய சூழ்நிலையில், போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் காங்கிரஸ் அரசின் ’செல்ல திட்டங்களுக்கு” பெருமளவு நிதி ஒதுக்கீடும், இந்தியாவினையே பாதிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு எவ்விதமான தீர்வும் இல்லாமல் மொன்னையாக முடிந்திருக்கிறது. இப்போது ஆரம்பித்து பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கும் எல்லா கருத்துக் கணிப்புகளுமே காங்கிரஸ் அரசுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. அப்படி ஒருக்கால், அது சாத்தியமாகும் பட்சத்தில், எந்த மாதிரியான அரசாங்கத்திடம் நாம் நாட்டை ஒப்படைக்க போகிறோம்?
மத்திய பட்ஜெட் பற்றி ஒரு ஒலிப்பதிவு
மத்திய பட்ஜெட் பற்றி நாராயணன் – பத்ரி சேஷாத்திரி கலந்துரையாடிய ஒரு ஒலிப்பதிவு
தரவிறக்க நேரடிச் சுட்டி இங்கே.
பட்ஜெட்(?)
பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சர் இல்லை. நேற்று அவர் வாசித்தது பட்ஜெட்டும் இல்லை. முந்தாநாள் ராத்திரி உட்கார்ந்து, ஹோம்வொர்க் முடிக்க வேண்டிய மாணவன் போல், அவசர அவசரமாக அவரே எழுதியது போல் இருந்தது. யாருக்கும் திருப்தியில்லை. மார்கெட் விழுந்தது. தொழிலதிபர்கள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டனர். வரிச்சலுகைகள் எதிர்பார்த்தவர்களுக்கும் ஏமாற்றம்.
தேர்தலுக்கு கொஞ்ச காலம் முன்னால் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்டில் பொதுவாக பெரிய அறிவிப்புகள் இருக்காது. காரணங்கள் இரண்டு:
1. அரசியல் தர்மம்: பதவியில் இருக்கும் கட்சி மக்களைக் கவரும் வண்ணம் புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பது அதிகார துஷ்பிரயோகமாக இருக்கும். இது அரசியல் தர்மம் அல்ல.
2. பொருளாதார தர்மம்: அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் வரப்போகும் அரசாங்கத்தைப் பொருளாதார ரீதியாகக் கட்டுப்படுத்தும். புதிய அரசாங்கத்திற்கு அதன் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முட்டுக்கட்டை போடலாம். இது பொருளாதார தர்மம் அல்ல.
இவ்விரண்டு காரணங்களினாலும், இந்த வருடம் ஒரு வரவு-செலவு திட்டம் இருக்காது, வரவு-செலவு கணக்கு மட்டுமே காட்டப்படும் என்று முன்னமே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில வாரங்களுக்கும் முன்னால் மத்திய அரசாங்கம், இம்முறை ஒரு இடைக்கால வரவு-செலவு திட்டம் அளிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒரு லேசான ஆச்சரியத்தையே உண்டு பண்ணியது. காரணம், தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடி. பரந்த அளவில் வேலை இழப்பு, சம்பளக்குறைப்பு, மார்கெட் சரிவு போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய அவசரம் இருப்பதால், பொருளாதாரத்திற்கு ஒரு உந்துதல் அளிக்கும் பட்ஜெட் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு உருவாக்கியது.
ஆனால், நேற்று வழங்கப்பட்ட பட்ஜெட் அந்த எதிர்பார்ப்புகளை ஏமாற்றியது. எந்த ஒரு தொழில்துறைக்கும் சலுகைகள் அளிக்கப்படவில்லை; எந்த ஒரு வரிச்சுமையும் குறைக்கப்படவில்லை; எந்த ஒரு புதிய திட்டமும் இல்லை. மாறாக மத்திய அரசின் “செல்லத்” திட்டங்களாக இருக்கும் சில திட்டங்களுக்குப் புதிய நிதி ஒதுக்கீடுகள் – அதாவது செலவுகள் – அறிவிக்கப்பட்டன. எந்த ஒரு புதிய வருமானமும் இல்லாமல், புதிய செலவுகளை அறிவித்ததால், புதிய பற்றாக்குறை உருவாகியுள்ளது. மேலும், இந்த செலவுகள் வரப்போகும் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் என்ற வகையில் மேற்கூறிய பொருளாதார தர்மத்திற்கு முரணானதாகவும் உள்ளன.
சந்தைப் பொருளாதாரத்தை எந்த விதத்திலும் ஊக்குவிக்காத, வரிச்சுமை எந்த விதத்திலும் குறைக்காத, வேலை வாய்ப்புகளை எந்த விதத்திலும் பெருக்காத இந்த இடைக்கால பட்ஜெட் தேவையே இல்லை. இதற்கு பதில் வெறுமனே கணக்கு காட்டி விட்டு தேர்தல் பிரசாரத்திற்குக் கிளம்பி இருக்கலாம். எல்லோருக்கும் நேரம் மிச்சமாகியிருக்கும்.
பட்ஜெட் பற்றி சில கருத்துப் பத்திகள்:
http://blog.investraction.com/2009/02/nothing-much-in-interim-budget.html
http://www.valueresearchonline.com/story/h2_storyView.asp?str=100143