தேர்தல்-2009

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு

Archive for the ‘அலசல்கள்’ Category

டைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு

with 2 comments

டைம்ஸ் ஆப் இந்தியா தேர்தல் பற்றிய அவர்களின் கணிப்பினை இன்றைக்கு வெளியிட்டு இருக்கிறது. தொகுப்பு கீழே. நான் தொடர்ச்சியாக சொல்லி கொண்டு வருகிற அதே விஷயம் தான் இதிலும் வெளியாகி இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி கணக்களவில் வலுவாக இருக்கிறது. இந்த கணிப்பும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் ஐ.மு.கூ இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. நிதர்சனத்தில் இன்னமும் அவர்கள் இருவரும் தொகுதி உடன்பாடு எண்ணிக்கையினை எட்டவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை காங். 5 மற்றும் கூட்டணி (முக்கியமாக திமுக) 11 இடங்கள் பெறும் என்று போட்டிருக்கிறது. இக்கணிப்பில் பாமக, அதிமுகவினை நோக்கி நகரும் என கணக்கிட்டு போட்டிருக்கிறார்கள். காங். 5 என்பது பெறக்கூடியதே. ஆனால் பாமக இல்லாத திமுக 11 இடங்கள் என்பது கொஞ்சம் சர்ச்சைக்குரியதே. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக 6 இடங்களில் போட்டியிட்டு ஆறிலும் வென்றார்கள். ஒரு வேளை அதிமுக வுக்கு இடம்பெயரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை 8 ஆக உயரலாம், ஏனெனில் அதிமுக, பாமக தவிர்த்து மதிமுக மற்றும் கம்யுனிஸ்டுகளோடும் தொகுதி பங்கு பேரத்தை மேற்கொள்ள வேண்டும்.

Times of India Poll Prediction

Times of India Poll Prediction

கட்சிகள். கூட்டணிகள். கணக்குகள்

with 2 comments

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கும்.இறுதியாக இப்போது காங்கிரஸ் முன்னிறுத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், பா.ஜ.க முன்னிறுத்தும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. தேவ கெளடாவின் மூன்றாவது அணீ மார்ச் 12 அன்றைக்கு அனைத்து தலைவர்களோடும் தன் தேர்தல் பிரச்சாரத்தினை தொடக்க இருக்கிறது. ஆனால், இந்த மூன்றாவது அணி ஒட்டினை பிரித்து, யார் பதவிக்கு நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களோடு போய்விடும் என்பது தான் பரவலான எண்ணம்.

இப்போதைக்கு யார் யாரோடு இருக்கிறார்கள் என்று பார்ப்போம்

ஐக்கிய முற்போக்கு அணி (UPA)

  • காங்கிரஸ் – சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத் மற்றும் மாநில ரீதியான காங்கிரஸ் தலைவர்கள்
  • ராஷ்ட்ரிய ஜனதா தள் (RJD + LJP) – லாலு பிரசாத் யாதவ் (பீகார்)
  • ஜனதா முக்தி மோர்ச்சா (JMM)- சிபு சோரன், (ஜார்கண்ட்) (சமீபத்திய செய்திகளில், முதலமைச்சர் பதவி தராததால் சிபு சோரன் கோவமடைந்து இருப்பதாக கேள்வி)
  • திரிணாமுல் காங்கிரஸ் (TP) – மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்)
  • தேசிய காங்கிரஸ் – உமர்/பரூக் அப்துல்லா (ஜம்மு & காஷ்மீர்)
  • சமாஜ்வாடி கட்சி (SP) – முலாயம் சிங்/அமர் சிங் கூட்டணி (உத்தரப்பிரதேசம்). முலாயம் நடுவில் “சரத் பவார்” பிரதமர் வேட்பாளராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று வேறு சொல்லியிருக்கிறார். இது தாண்டி, உ.பியின் தொகுதி பங்கீட்டில் இன்னமும் உடன்பாடு ஏற்படவில்லை.
  • தேசியவாத காங்கிரஸ் (NCP) – சரத் பவார். மஹாராஷ்ட்ராவின் கிங் மேக்கர். காங்கிரஸோடு தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார். இன்னமும் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை. கூடவே, சிவசேனாவோடு வேறு தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறார். மஹாராஷ்டிராவில் இப்போது காங்கிரஸ் + தேசியவாத காங்கிரஸின் கூட்டணி அரசு நடந்து கொண்டிருக்கிறது.
  • திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) – கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ராசா (தமிழ்நாடு) தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான அலை இருப்பதாக தெரிகிறது.காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கொடுப்பதாக கருணாநிதி கூட்டணியை தக்கவைத்து கொண்டு இருக்கிறார். தேர்தலின் முடிவுக்கு பின், காங்கிரஸ் கூட்டணி பற்றி பரிசீலனை செய்யலாம்.
  • விடுதலைச் சிறுத்தைகள் (VCK) – திருமாவளவன் (தமிழ்நாடு).கருணாநிதியோடு கூட்டணியில் இருக்கிறார். தலித் மக்களின் ஒட்டு இன்னமும் விடுதலைச் சிறுத்தைகள் பக்கம் இருக்கிறது. ஆனால், இலங்கைப்பிரச்சனையில் விடுதலைச் சிறுத்தைகளின் கவனமும், கருணாநிதியோடு கூட்டும் எதிர்மறையானது.

ஆக இப்போதைக்கு
UPA = INC + RJD + LJP + TP + SP + NCP + NC + DMK + VCK + உதிரிக் கட்சிகள்

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)

  • பாரதீய ஜனதா கட்சி – அத்வானி, மோடி, அருண் ஜெட்லீ, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங்.
  • அகாலி தளம் (AD) – பஞ்சாப்.கூட்டணி உறுதியாகிவிட்டது.
  • இந்திய தேசிய லோக் தளம் (INLD) – சவுதாலா. ஹரியானாவின் மிக முக்கியமான தலைவர். கூட்டணி உறுதியாகிவிட்டது.
  • ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) – அஜித் சிங். உத்தரப்பிரதேசம். ஜாட் இன மக்களின் முக்கியமான தலைவர். கூட்டணியும், தொகுதி பங்கீடும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு உ.பியின் ஜாட் இன மக்கள் அதிகம். மாயாவதிக்கும், சமாஜ்வாடி பார்ட்டிக்கும் கடுமையான போட்டியாக இருக்கும்.
  • பாரதீய ஜனதா தள் (BJD) – பிஜு பட்நாயக்.ஒரிஸ்ஸா.கூட்டணி உறுதி. தொகுதி பங்கீடு இன்னமும் முடியவில்லை.
  • சிவ சேனா – பால் தாக்கரே. மஹாராஷ்டிரா. பெரியதாக இப்போதைக்கு மஹாராஷ்டிராவில் சிவ சேனாவிற்கு மரியாதை இல்லை. பா.ஜ.கவோடு பல சமயங்களில் கருத்து ரீதியான மோதல்கள் இருந்திருக்கிறது. ஆனாலும், இந்த தேர்தலை சேர்ந்தே சந்தித்தாக வேண்டிய கட்டாயம். ஒரு வேளை சரத் பவார் மனசு மாறினாறென்றால், சிவசேனா + பாஜக + தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸினை இடம் தெரியாமல் ஒட வைக்கலாம்.
  • அஸ்ஸாம் கன பரிஷத் (AGP) – பிரபல் குமார் மகந்தா. அஸ்ஸாம். பாஜக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸிற்கு எதிரானது என்பதால், உடன்படிக்கை ஏற்படலாம் என்பது நம்பிக்கை.
  • தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) – விஜயகாந்த். தமிழ்நாடு. இதை எழுதும் இந்த நிமிடம் வரை எவ்விதமான கூட்டணியும் இல்லை. ஆனால் செய்திகள் தேமுதிகவும் பாஜகவும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்கின்றன. சென்ற மாநில தேர்தல்களில் 8.33% ஒட்டு பெற்று மக்களி்ன் கவனத்தினை ஈர்த்த கட்சி. இளைஞர்கள் மத்தியில் விஜயகாந்திற்கு நல்ல பெயர் இருக்கிறது. இப்போதைக்கு எதுவும் நிச்சயமில்லை. இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று வேறு நடுவில் சொல்லியிருந்தார்கள்

ஆக இப்போதைக்கு
NDA = BJP + Shiv Sena + AD + INLD + AGP + RLD + உதிரிக் கட்சிகள்

மூன்றாவது அணி

மார்ச் 12 ஆம் தேதி தேவ கெளடா தலைமையில் துவக்கம் இருக்கிறது. இப்போதைக்கு கொஞ்சம் இன்பார்மலாக பல கட்சிகள் அதில் இருக்கின்றன.

ஜனதா தளம் (இணைப்பு) (JD (U)) - முந்திய பிரதமர் தேவ கெளடா. முன்னாளைய கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி. கர்நாடாகாவில் மிக முக்கியமானn கட்சி. கன்னடிகா, கன்னட எழுச்சி என்று பெங்களூர் சாராத கர்நாடாகாவில் வலிமையோடு இருக்கக்கூடிய கட்சி.
பிரச்சனை: ஒரு வேளை தேர்தலில் ஜெயித்து, ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் வருமெனில் அங்கே தாவி விடக் கூடிய அபாயமிருக்கிறது. அவர்களுடைய பிரச்சனை மாநிலத்தில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து, பிறகு கவிழ்த்து, இப்போதைக்கு பாஜக ஆட்சி நடந்து வருவது.

கம்யுனிஸ்டுகள் (CPI /CPM) -பிரகாஷ் காரத். பிருந்தா காரத்.புத்ததேவ் பட்டாச்சார்யா. பரதன். பின்ராயி விஜயன். மேற்கு வங்காளம், கேரளாவில் ஆட்சி்யிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து, இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் வெளியேறினார்கள். பிரகாஷ் காரத்திற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஒரு கூட்டணியில் இருக்கவேண்டிய கட்டாயம். இந்தியா முழுக்க கம்யுனிஸ்டு அனுதாபிகள் இருக்கிறார்கள். காங்கிரஸ், பாஜகவை விட இந்தியாவெங்கும் ஒரளவிற்கு பரவலான வாக்காளர்களை கொண்ட கட்சி.
பிரச்சனை: தனித்து இருப்பதால், வாக்கினை பிரிக்கலாமெயொழிய ஆட்சி அமைக்க முடியாது. நல்ல எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்கமுடியும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (ADMK) – ஜெயலலிதா. தமிழ்நாடு. திமுக எதிர்ப்பலையில் இப்போதைக்கு உற்சாகமாக இருக்கிறார்கள். மூன்றாவது அணியில் இருக்கிறேன் என்று போயஸ் கார்டனில் தலைவர்களோடு தேனீர் அருந்திவிட்டு, காங்கிரஸை தன்னோடு சேருங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தவர். தென் தமிழகத்தில் கட்சியின் வாக்கு வங்கி அதிகம். மதிமுக மற்றும் கம்யுனிஸ்டுகள் களத்தில் இறங்கி வேலை செய்வார்கள் என்பது கூடுதல் பலம். இப்போதைக்கு மூன்றாம் அணி.
பிரச்சனை: காங்கிரஸுக்கு பகிரங்க அழைப்பு விட்டதால், தேர்தலுக்கு பின்னான நிலைமை சொல்ல முடியாது. ஜெயலலிதாவின் தேவை, திமுக ஆட்சி கலைப்பு. அதற்கு தோதாக தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக அமைந்து ஐ.மு.கூ க்கு 15-20 இடங்கள் தேவைப்படுமெனில் காங்கிரஸ் திமு்கவை கழட்டிவிட்டு அதிமுகவோடு சேரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.அப்போது தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆதரவு வி்லக்கப்படும்.அதிமுக ஆட்சியில் அமர ஒரு வாய்ப்பிருக்கும்.

தெலுகு தேசம் (TDP) , தெலுங்கானா ராஷ்ட்ரியா சமிதி (TRS) – சந்திரபாபு நாயுடு.ராகவேந்தர் ராவ். ஆந்திரா. உத்வேகத்தோடு காங்கிரஸ் எதிர்ப்பலையில் போட்டி போ்டுகிறார்கள். தெலுகு தேசம் + தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி + கம்யுனிஸ்டுகள் என கூட்டணி அமைத்து மாநிலத்துக்கும், நாடாளுமன்றத்திற்குமான தொகுதி உடன்பாடுகள் பேசப்பட்டு வருகின்றன. சந்திரபாபு நாயுடுவிற்கு தன்னை நிறுப்பித்தாகவேண்டிய கட்டாயம்.
பிரச்சனை: ஐ.மு.கூக்கு கண்டிப்பாக போக மாட்டார்கள். ஆனால் ஒரு வேளை தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் சாத்தியங்கள் இருக்கும் பட்சத்தில், தெலுகு டதேசம் பாஜகவுக்கு வெளியிலிருந்தோ, இல்லை உள்ளே போயோ ஆதரவு கொடுக்கலாம். பாஜகவும் இப்போது தெலுங்கானா பற்றி பேசுவதால் தெலு்ங்கான ராஷ்ட்ரிய சமிதியும் பாஜகவுக்கு ஆதரவு தரலாம்

ஆக இப்போதைக்கு
Third Front = JD(U)+ CPI +CPM + TDP + TRS + AIADMK + உதிரிக் கட்சிகள்

மதில் மேல் பூனைகள்

பகுஜன் சமாஜ் பார்ட்டி (BSP) – மாயாவதி. உத்தரப்பிரதேசம். தலித் மக்களின் எழுச்சி என்று நம்பப்படுபவர். டெல்லியின் மீதும், பிரதமர் பதவி மீதும் எப்போதும் ஒரு கண் இருக்கிறது. உ.பியின் 80 தொகுதிகளில் பிஎஸ்பியின் கை ஒங்கியி்ருக்கிறது. காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு கூட்டணி இல்லாமல் கனவுகள் நிறைவேறாது. ஆனாலும், இன்னமும் மூன்றாவது அணியினை நம்பி இறங்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஏதேனும் வியுகங்கள் வகுக்கலாம்

பாட்டாளி மக்கள் கட்சி – ராமதாஸ். அன்புமணி ராமதாஸ். தமிழ்நாடு. ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும், கூட்டணியிலிருந்து விலகி விட்டார் என்று தமிழ்நாட்டில் நம்பப்படுகிறது. தொடர்ச்சியாக 12 வருடங்கள், பாஜகவுடனும், காங்கிரஸுடனும் இருந்து மத்தியில் அமைச்சரவைகள் பெற்றுக் கொண்ட கட்சி. இலங்கை தமிழர் பிரச்சனையில் கருத்து வேறுபாடுகள், ஆளும் திமுக + காங்கிரஸ் கூட்டணியோடு உருவாகியிருக்கிறது. பல்வேறு மாநிலம் தொ்டர்பான பிரச்சனைகளிலும் பாமகவின் பார்வை புறக்கணிக்கப்பட்டது, ஆழமான விரிசலை உண்டாக்கியிருக்கிறது. ஹேஷ்யங்கள், ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணிக்கு போவார் என்று சொல்கிறது. இன்னமும் கூட்டணி பற்றி முடிவெடுக்கவில்லை.

மேற்சொன்னவை தேர்தலுக்கு முன்னான இப்போதைய நிலைமை.

நிகழ்சூழல் 1

ஒரு வேளை காங்கிரஸ் முன்னிறுத்தும் ஐ.மு.கூ தொகுதிகள் அடிப்படையில் மு்ன்னிலை பெறும் பட்சத்தில், ஜனதா தள் (இணைந்தது), அதிமுக, ஒரு சாரார் கம்யுனிஸ்டுகளே அதற்கு முட்டுக் கொடுத்து கூட்டணி அரசினை நிற்க வைக்கலாம்.

நிகழ்சூழல் 2

ஒரு வேளை பாஜக முன்னிறுத்தும் தே.ஜ.கூ தொகுதிகள் அடிப்படையில் முன்னிலைப் பெறும் பட்சத்தில், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி பார்ட்டி, தெலுகு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகள் அதற்கு முட்டுக் கொடுத்து கூட்டணி அரசினை நிற்க வைக்கலாம். பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவிற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கலாம். அதிமுகவிற்கும் அதே நிலை.ஆனால் பாஜகவினர் முன்பு நடந்ததை மறந்திருக்க மாட்டார்கள்.

நிகழ்சூழல் 3

மூன்றாவது அணி பெருவாரியான தொகுதிகள் முன்னிலைப் பெறுவது என்பது இப்போதைக்கு சொல்லமுடியாத காரியம். அப்படி ஒருக்கால் நடக்கும்பட்சத்தில், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், அஸ்ஸாம் கன பரிஷத், அகாலி தளம், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் ஆதரவளிக்கலாம்.

மேற்சொன்ன மூன்று சூழல்களிலும் பாமக பொதுவான ஒரு ஆதரவினை, சூழலைப் பொறுத்து எடுத்து அமைச்சரவையில் இடம் பிடிப்பார்கள் என்று தோன்றுகிறது.

THE GAME JUST BEGINS.

Anti-incumbency Factor தேய்கிறதா?

leave a comment »

இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு முக்கியமான கட்டுரை EPW விலிருந்து எடுத்து போடப்பட்டிருக்கிறது. கட்டுரையின் சாராம்சம் – anti-incumbency என்று சொல்லக்கூடிய, ஆளும்கட்சியின் மீதான கசப்புணர்வு இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக ஆளும்கட்சிகள் தேர்தலில் அரசினை நிர்வகிக்கும் பொறுப்பினை இழப்பது 46% வாக குறைந்திருக்கிறது. இதை வேறு வகையாகவும் பார்க்கலாம். இரண்டு மாநிலங்களை எடுத்துக் கொண்டோமானால், ஒரு மாநிலத்தில் ஆளும்கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.

கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லியில் [நவ-டிச. 2008] ஆளும்கட்சிகளுக்கே மக்கள் மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள்.அதற்கு முன்பு மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா, அஸ்ஸாம், ஒரிஸ்ஸா மற்றும் குஜராத்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கின்றனர். தென் மாநிலங்களில் இது நடக்கவில்லை.

1999-2003 காலகட்டத்தில் மொத்தம் 29 மாநிலங்களில், 10த்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.இந்த விழுக்காடு 2004-2008 இல் அதிகரித்திருக்கிறது. 28 மாநிலங்களில் 13ல் மீண்டும் ஆளும்கட்சியினரே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்ன? 2003இல் ஆரம்பித்த Boom 2008 ஜூன் வரையிலான காலம்வரைக்கும் இருந்தது.ஆக யார் ஆண்டிருந்தாலும், பல விஷயங்கள் அவர்களை மீறியே நடந்திருக்கிறது. ஆனால் வெறுமனே அது மட்டும் காரணமாகிவிட முடியாது. அரசாளும் கட்சிகளும் முனைப்போடு பல திட்டங்களை முன் வைத்து நிகழ்த்தியிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த வெற்றிகளின் பின் வாக்கு போடும் பொதுஜனம் ஒரு குறியீடாக சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். 2004-2009 வரையிலான வெற்றிகளை அலசலாம்.

மேற்கு வங்காளம்(2006), நாகாலாந்து (2008) மற்றும் சத்தீஸ்கர் (2008) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் முந்திய ஆட்சியில் எடுத்த வாக்கு சதவிகிதத்தினை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்கள். மத்தியப்பிரதேசம் (2008),குஜராத்(2007) மற்றும் ஒரிஸ்ஸா (2004) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் ஜெயித்தது ஒரு “qualified extension” அளவே. குறைவான மெஜாரிடியில் தான் இவ்வெற்றிகள் சாத்தியமாயிருக்கிறது. மஹாராஷ்டிரா (2004) மற்றும் டெல்லி (2008) மாநிலங்களில் ஆளும் கட்சியோ/கூட்டணியோ மிக அதிக அளவில் வாக்கு வங்கியினை தவறவிட்டாலும், ஆட்சியினை பிடித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் இது எவ்வாறாக எதிரொலிக்கும்? பதவியின் இடைக்காலத்தில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சிநடத்தும் தமிழ்நாடு, அஸ்ஸாம், கோவா, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சி நடத்தும் உத்தரகாண்ட், பிஹார், குஜராத், பஞ்சாப், மற்றும் மாநில தேர்தல்களை அடுத்த ஒரு வருட காலக்கட்டத்துக்குள் எதிர்நோக்கியிருக்கும் ஆந்திரா, ஒரிஸ்ஸா, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இப்போதைக்கு தேர்தலின் வாக்கு சார்ப்பினை கணிப்பது மிக கடினம்.

Czarinas of India – ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி

leave a comment »

ஆக நடந்து முடிந்த ஐபின் வாக்கெடுப்பில் தமிழகம் ஒரு முக்கியமான காரணியாக இருக்குமென்று சொல்லியிருக்கிறார்கள். நடுவில் ஜெயலலிதா [40 தொகுதிகள் பாண்டிச்சேரி உட்பட] காங்கிரஸினை வேறு அழைத்திருக்கிறார் கூட்டு சேர. மேற்கு வங்காளத்தில் மம்தா பானார்ஜியின் திரிணாமுல் காங்கிரஸினை காங்கிரஸ் வளைக்க பார்க்கிறது. நந்திகிராமின் பிரச்சனைகள் இருந்தாலும், கம்யுனிஸ்டுகள் இன்னமும் மேற்கு வங்காளத்தில் வலிமையோடு தான் இருக்கிறார்கள். மேற்கு வங்காளம் ஒரு முக்கியமான மாநிலம் [42 தொகுதிகள்] ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கம்யுனிஸ்டுகள் ஆதரவு கொடுத்த காலத்தில், மேற்கு வங்காளத்தின் தொகுதிகள் முக்கிய பங்கு வகித்தது. தேர்தலுக்கு பின்னான உறவுகள்/கூட்டணிகள் பற்றி இப்போது பேச முடியாது என்றாலும், காங்கிரஸ் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க முயல்கிறது.உத்தரப்பிரதேசம் [80 தொகுதிகள்] மாயாவதியின் ஆட்சியின் கீழ் இருக்கிறது. மாயாவதி காங்கிரஸ்/பாஜகவோடு இப்போதைக்கு எவ்விதமான பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராக இல்லை. ஆனால், தேர்தல் முடிந்து ஒரு வேளை காங்கிரஸுக்கு தேவைப்படும் பட்சத்தில், சில உயர்பதவிகளை கேட்டு ஆதரவு கொடுக்கலாம்.

ஆனால், மூவருக்கும் உள்ள ஒற்றுமை, மூவரையும் எந்த காலத்திற்கும் நம்பமுடியாது. சோனியாவினை திட்டிய அதே ஜெயலலிதா தான் இன்றைக்கு காங்கிரஸுக்கு ரத்தின கம்பளம் போட்டு கூட்டணியில் சேர அழைக்கிறார். மம்தா பானர்ஜியும் லேசுப்பட்டவர் அல்ல. கடந்த காலங்களில் பாஜக இவரிடம் பட்டிருக்கிறது.

மாயாவதி, ஜெயலலிதா,மமதா பானர்ஜி மூவரிடத்திலும் சேர்த்து (162 தொகுதிகள்) இப்போதைக்கு இருக்கிறது. மூவருமே அவரவர் மாநிலங்களில் பெரும் செல்வாக்கும், வாக்கு வங்கியும் பெற்றவர்கள். ஒரு வேளை காங்கிரஸ் இப்போதைக்கு எவ்விதமான கூட்டணி வைக்காமல் போய் 180 தொகுதிகள் கூட்டணியோடு ஜெயித்தார்களேயானால், அதே வேளையில் இந்த மூவர் கூட்டணி 70 – 90 தொகுதிகள் ஜெயித்தார்களேயானால் இவர்கள் இல்லாமல் அரசமைக்க இயலாது. மூவருக்குமே உள்ளூர காங்கிரஸ் பிடிக்காது என்றாலும், அத்தகைய ஒரு நிலை வந்தால், தன்னிலையிலிருந்து இறங்கி வருவார்கள் என்று தெரிகிறது. ஒரு வேளை அது நடக்கும் பட்சத்தில், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, தமிழகத்தில் திமுக [பாமக, விடுதலை சிறுத்தைகள் நிலை இப்போதைக்கு சரியாக சொல்ல இயலாது] ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து கழட்டி விடப்படுவார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவு.

Will Women Power rock the elections, we got to wait and watch?

பாஜகவின் தேர்தல் முகங்கள்

leave a comment »

BJPs Poll calculations

BJP's Poll calculations

நாக்பூரில் நடந்து முடிந்த பா.ஜ.கவின் 3 நாள் தேர்தலுக்கான சந்திப்பின் இறுதியில் குழப்பத்தினை தவிர பெரிதாக எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் உண்மை. அத்வானியினை பிரதம மந்திரி வேட்பாளாராக பறைசாற்றிக் கொண்டாலும், பெரியதாய் போட்டியிட அவர்களிடத்தில் விஷயமில்லை. அந்த விஷயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஐந்தாண்டு கால ஆட்சி ஒரு விதிவிலக்கு. தொடர்ச்சியாக பேசி கொண்டிருந்தாலும், மக்களை முன்னிறுத்தும் ஒரு பிரச்சனையை, வாகனத்தை, வாசகத்தை இன்னமும் பாஜக கண்டறியவில்லை என்பது தான் நிதர்சனம்.

அவுட்லுக் மற்றும் இந்தியா டுடே பத்திரிக்கைகளில் வெளியான நாக்பூர் கூட்டம் சம்பந்தமான செய்திகளை படித்தால் குழப்பம்தான் மிஞ்சுகிறது. அவுட்லுக் பத்திரிக்கை பாஜக தெளிவாக இருக்கிறது என்று சொல்கிறது. இந்தியா டுடேயோ குழப்பத்தில் இருக்கிறது என்று வரையறுக்கிறது. ஒரு விஷயத்தில் பாஜக காங்கிரஸை விட பலம் வாய்ந்ததாக இருக்கிறது – அது அவர்களின் இரண்டாம் கட்ட தலைவர்கள். வாரிசு அரசியலையை வழிப்படுத்துணையாக கொண்டிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களை விட, இது மேல். நடந்து முடிந்த கூட்டத்தில், அவர்கள் இதுவரை கைவசம் வைத்திருக்கும் 138 தொகுதிகளை காபாற்றுவதே மிக முக்கியமான இலட்சியமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

இதற்கு முன்னால் இருந்த மாதிரி இல்லாமல், இந்த முறை ஒவ்வொரு தலைவரிடமும் சில மாநிலங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சாந்த குமாரும் பகத் சிங் கொஷியாரியும் ஜம்மு & காஷ்மீர், இமாசலப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அரியானாவினை பார்ப்பார்கள். தேசிய தேர்தல் மேலாளராக நினைத்த அருண் ஜெட்லியின் நினைப்பில் வீழ்ந்தது மண்.அவர் இப்போது உத்தரபிரதேசம், பிஹார்,பஞ்சாப்,டெல்லி மற்றும் அரியானாவினை கவனிப்பார். முக்கியமான விஷயமென்னவெனில், மேற்சொன்ன மாநிலங்கள் அனைத்திலும் பாஜக அவ்வளவு வலுவாக இல்லை. நரேந்திர மோடி என்றால் குஜ்ராத் என்றாகிவிட்டது. அது தவிர மஹாராஷ்டிரா, கோவா, டாமன் & டையு போன்ற மாநிலங்களையும் கவனிப்பார். சுஷ்மா சுவராஜ் போபாலிருந்து போட்டியிடுவார் என்று தோன்றுகிறது. அவர் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டினை கவனிப்பார். தெற்கில் கர்நாடகா தவிர வேறெங்கும் சொல்லி கொள்ளும்படி பாஜக இல்லை, ஆகவே வெங்கயா நாயுடு தெற்கினை பார்த்துக் கொள்வார்.இது தவிர சமீபத்தில் நடைபெற்ற மாநில தேர்தல்களில் வெற்றிப் பெற்ற ராமன் சிங் (சத்தீஸ்கர்), ஷிவ்ராஜ் சிங் சவுஹான் (மத்தியபிரதேசம்) அவரவர்கள் மாநிலங்களில் முன்னிலைப்படுத்தப் படுவார்கள். காங்கிரஸை போல அல்லாமல், இரண்டாம் நிலை தலைவர்கள் பாஜகவில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.

அவுட்லுக்கின் கூற்றுப்படி பார்த்தால் 4 விஷயங்களில் பாஜக தெளிவாக இருக்கிறது.

  1. 70,000 மக்களிடம் பாஜக ஒரு ரகசிய சர்வே எடுத்திருக்கிறது, அதன் படி பார்த்தால் பாஜக நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் பெறும் சாத்தியங்கள் தெரிகின்றன
  2. பாஜக / தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களான – பீஹார், ஒரிஸ்ஸா, மத்தியபிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் மிக குறைவான anti-incumbency அலை தெரிகிறது
  3. anti-incumbency அலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆளும் மாநிலங்களான மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், அஸ்ஸாம் மற்றும் அரியானாவில் அதிகமாக இருக்கிறது.இந்த மாநிலஙகளில் பாஜக கூட்டணியினை பலப்படுத்தி, மாநில பிரச்சனைகளை முன்னிறுத்தி தன்னுடைய வாக்கு வங்கியினை பலப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன
  4. மாயாவதி மற்றும் இடதுசாரிகள் ஆளும் கேரளா / மேற்கு வங்காளத்தில் பெரிய அலைகள் என்று ஒன்றுமில்லை

பார்க்க: அவுட் லுக் | இந்தியா டுடே

Gross Domestic Politics

with 2 comments

சவுபிக் சக்ரப்ர்தியின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்தி, காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கையாலாகத தனத்தினைப் பற்றி பேசுகிறது. பல்வேறு கூறுகளில் நான் சக்ரபர்தியோடு ஒத்துப் போகிறேன். முக்கியமாக, 4 ஆண்டுகள் பொருளாதார சூழல் நன்றாக இருந்த போது, போதுமான அளவிற்கான நிதியறிவோடு (fiscal prudence) இருந்திருந்தால், இப்போது இந்தளவிற்கு நிதி பற்றாக்குறை வந்திருக்காது. இதையே தான் எகனாமிக் டைமிஸின் பத்தியும் பேசியிருக்கிறது. நிதி பற்றாக்குறை தான் இன்றைக்கு உலகமெங்கும், பொருளாதார மந்தத்திற்கு எதிராக இடைக்கால ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உண்மையாக இருந்தாலும், சரியான கவனிப்பு இல்லாமல் போனால், அர்ஜெண்டினிய பாதிப்பு போல நமக்கும் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.

தேர்தல் வரும் காலம் பார்த்து போன பட்ஜெட்டில் (இடைக்கால பட்ஜெட்டில் அல்ல) அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேளாண்மை, அரசு அலுவலகர்கள், ராணுவம் என வாரி வழங்கினார். இரண்டு ஊக்கத்திட்டங்களுக்கு (stimulus package) பின்னும் பொருளாதாரம் காற்று வாங்குகிறது. இன்றைய எகனாமிக் டைம்ஸின் தலையங்கத்தில் இந்தியாவின் நிதி பற்றாக்குறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு இருக்கிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஆளும் மத்திய அரசினை சார்ந்தது. ஆனால், அப்போதெல்லாம் கவனிக்காமல், கடைசி சமயத்தில் உலக பொருளாதார மந்த நிலையின் மீது பழி போடுவது என்பது கையாலாகததனமேயொழிய வேறில்லை.

இத்தகைய சூழ்நிலையில், போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் காங்கிரஸ் அரசின் ’செல்ல திட்டங்களுக்கு” பெருமளவு நிதி ஒதுக்கீடும், இந்தியாவினையே பாதிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு எவ்விதமான தீர்வும் இல்லாமல் மொன்னையாக முடிந்திருக்கிறது. இப்போது ஆரம்பித்து பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கும் எல்லா கருத்துக் கணிப்புகளுமே காங்கிரஸ் அரசுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. அப்படி ஒருக்கால், அது சாத்தியமாகும் பட்சத்தில், எந்த மாதிரியான அரசாங்கத்திடம் நாம் நாட்டை ஒப்படைக்க போகிறோம்?

இன்னுமொரு சாதிக்கட்சி உதயமானது.

with one comment

நேற்றைய தினமலர் செய்தி:

http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=873

கோவையில் நடந்த கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை அரசியல் எழுச்சி மாநாட்டில், கொங்குநாடு முன்னேற்ற பேரவை என்ற கட்சி முறைப்படி துவக்கப்பட்டது; பச்சை மற்றும் மஞ்சள், சிவப்பு நிற கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.கொங்கு வேளாள கவுண்டர் பேரவை அரசியல் எழுச்சி மாநாடு, கோவை மாவட்டம், கருமத்தம் பட்டியில் கோலாகலமாக துவங்கியது. பின், தீரன் சின்னமலை கடவுளாக அறிவிக்கப்பட்டு, கண் திறக்கும் நிகழ்ச்சியும், கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், பரமத்தி, வேலூர், சங்ககிரி, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் கொங்கு இன மக்கள் வசிக்கின்றனர். இம்மக்களின் கோரிக்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்ல, வலுவான அமைப்பு தேவை என்ற கோஷத்துடன் கொங்கு வேளாள கவுண்டர் பேரவை, தன்னுடைய அரசியல் பிரவேசத்தை ஆரம் பித்துள்ளது.பேரவையின் முதல் அரசியல் எழுச்சி மாநாடு, கருமத்தம் பட்டியில் அதிகாலை யாக பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது.

——————————————–

தமிழர் என்று இனத்தால் ஒன்று பட வேண்டிய நேரத்தில் நம்மக்கள் சாதிப் பெயரில் கட்சி / அரசியல் நடத்துவது வேதனையானது.

பட்ஜெட்(?)

leave a comment »

பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சர் இல்லை. நேற்று அவர் வாசித்தது பட்ஜெட்டும் இல்லை. முந்தாநாள் ராத்திரி உட்கார்ந்து, ஹோம்வொர்க் முடிக்க வேண்டிய மாணவன் போல், அவசர அவசரமாக அவரே எழுதியது போல் இருந்தது. யாருக்கும் திருப்தியில்லை. மார்கெட் விழுந்தது. தொழிலதிபர்கள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டனர். வரிச்சலுகைகள் எதிர்பார்த்தவர்களுக்கும் ஏமாற்றம். 

தேர்தலுக்கு கொஞ்ச காலம் முன்னால் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்டில் பொதுவாக பெரிய அறிவிப்புகள் இருக்காது. காரணங்கள் இரண்டு:

1. அரசியல் தர்மம்: பதவியில் இருக்கும் கட்சி மக்களைக் கவரும் வண்ணம் புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பது அதிகார துஷ்பிரயோகமாக இருக்கும். இது அரசியல் தர்மம் அல்ல.

2. பொருளாதார தர்மம்: அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் வரப்போகும் அரசாங்கத்தைப் பொருளாதார ரீதியாகக் கட்டுப்படுத்தும். புதிய அரசாங்கத்திற்கு அதன் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முட்டுக்கட்டை போடலாம். இது பொருளாதார தர்மம் அல்ல.

இவ்விரண்டு காரணங்களினாலும், இந்த வருடம்  ஒரு வரவு-செலவு திட்டம் இருக்காது, வரவு-செலவு கணக்கு மட்டுமே காட்டப்படும் என்று முன்னமே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில வாரங்களுக்கும் முன்னால் மத்திய அரசாங்கம், இம்முறை ஒரு இடைக்கால வரவு-செலவு திட்டம் அளிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒரு லேசான ஆச்சரியத்தையே உண்டு பண்ணியது. காரணம், தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடி. பரந்த அளவில் வேலை இழப்பு, சம்பளக்குறைப்பு, மார்கெட் சரிவு போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய அவசரம் இருப்பதால், பொருளாதாரத்திற்கு ஒரு உந்துதல் அளிக்கும் பட்ஜெட் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு உருவாக்கியது.

ஆனால், நேற்று வழங்கப்பட்ட பட்ஜெட் அந்த எதிர்பார்ப்புகளை ஏமாற்றியது. எந்த ஒரு தொழில்துறைக்கும் சலுகைகள் அளிக்கப்படவில்லை; எந்த ஒரு வரிச்சுமையும் குறைக்கப்படவில்லை; எந்த ஒரு புதிய திட்டமும் இல்லை. மாறாக மத்திய அரசின் “செல்லத்” திட்டங்களாக இருக்கும் சில திட்டங்களுக்குப் புதிய நிதி ஒதுக்கீடுகள் – அதாவது செலவுகள் – அறிவிக்கப்பட்டன. எந்த ஒரு புதிய வருமானமும் இல்லாமல், புதிய செலவுகளை அறிவித்ததால், புதிய பற்றாக்குறை உருவாகியுள்ளது. மேலும், இந்த செலவுகள் வரப்போகும் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் என்ற வகையில் மேற்கூறிய பொருளாதார தர்மத்திற்கு முரணானதாகவும் உள்ளன.

சந்தைப் பொருளாதாரத்தை எந்த விதத்திலும் ஊக்குவிக்காத, வரிச்சுமை எந்த விதத்திலும் குறைக்காத, வேலை வாய்ப்புகளை எந்த விதத்திலும் பெருக்காத இந்த இடைக்கால பட்ஜெட் தேவையே இல்லை. இதற்கு பதில் வெறுமனே கணக்கு காட்டி விட்டு தேர்தல் பிரசாரத்திற்குக் கிளம்பி இருக்கலாம். எல்லோருக்கும் நேரம் மிச்சமாகியிருக்கும்.

பட்ஜெட் பற்றி சில கருத்துப் பத்திகள்:

http://blog.investraction.com/2009/02/nothing-much-in-interim-budget.html

http://www.valueresearchonline.com/story/h2_storyView.asp?str=100143

Written by srikan2

February 17, 2009 at 3:01 PM

அலசல்: மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள்?

leave a comment »

தேர்தல் சுவாரசியங்கள் களை கட்டத் தொடங்கிவிட்டன. கற்பனையில் கூட சாத்தியமில்லாத விஷயங்களையெல்லாம் பேச ஆளாளுக்கு ஒரு திசையில் லவுட்ஸ்பீக்கர்கள் போடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள் என்பது பற்றிய அடிப்படையான ஒரு செய்தியினை மொத்தமாக மறந்துவிட்டார்கள்.

கடந்த 6 மாதங்களில் மாநிலங்களில் நடந்த தேர்தல்களையும், அதன் உட்பொருளையும் பார்த்தால் ஒரளவிற்கு இதன் pattern விளங்கும். ராஜஸ்தான்,டெல்லி,மத்திய பிரதேஷ்,மிசோரம்,சத்திஸ்கர், ஜம்மு & காஷ்மீர் என 6 இடங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மிசோரமில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஜம்மு & காஷ்மீரில் ஜே.என்.சியின் உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறது. மீதமிருக்கும் மத்திய பிரதேஷ், சத்தீஸ்கரில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பெருவாரியான மக்கள் இந்த முறை வாக்களித்திருக்கிறார்கள். சராசரியாக 60% மேலான வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.

டெல்லியில் ஷீலா தீக்‌ஷித் தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கிறது. ராஜஸ்தானில் பா.ஜ.க தோற்று காங்கிரஸும், மத்திய பிரதேஷில் காங்கிரஸ் தோற்று பா.ஜ.கவும் ஆட்சி அமைத்திருக்கின்றன. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது வளர்ச்சித் திட்டங்கள், ஆட்சியில் இருக்கும்/அமையப் போக்கும் கட்சியின் தொலை நோக்கு பார்வை, சராசரி குடிமகனுக்கான வசதிகள். அதை செவ்வனே செய்து கொண்டிருக்கும் டெல்லியில், மீண்டும் அதே கட்சி ஆட்சி அமைய மக்கள் வழிவகுத்திருக்கிறார்கள். அப்படி வளர்ச்சி போதுமான அளவில் இல்லாத மாநிலங்களில், மக்கள் மாற்று கட்சியினை முன்னிறுத்தியிருக்கிறார்கள். தேசிய கட்சியாக தன்னை முன்னிறுத்த மாயாவதி செய்த விஷயங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.

26/11 பின்னான இந்தியாவில், சாதாரண குடிமக்கள் நாட்டின் பாதுகாப்பினையும், ஸ்திரத்தன்மையையும் முக்கியமாக பார்க்கிறார்கள். கிட்டத்திட்ட 3 மாதங்கள் ஆக கூடிய நிலையில், இன்னமும் காங்கிரஸ் அரசு சரியான முடிவு சொல்லாத நிலையில், முக்கியமாக மஹாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு இந்தியாவில், காங்கிரஸின் மீதான எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. வடக்கு / மேற்கில் 26/11 ஒரு பிரச்சனையென்றால், தமிழ்நாட்டில் ஆளும் திமுக/காங்கிரஸ் மீது ஈழத்தமிழர்கள் மீதான பிரச்சனையில், தமிழக இளைஞர்கள் கடுங்கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் அரசின் மீதான பிரச்சனைகள், தெலுங்கானா, சிரஞ்சீவியின் ப்ரஜா ராஜ்யம் என நீளும் பிரச்சனைகளும், கர்நாடகாவில் பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு நடத்தப்பட்டுள்ள இனம்/கலாச்சாரம் சார்ந்த அடக்குமுறைகளும், கேரளாவில் கம்யுனிஸ்டுகளிடையே நடந்து கொண்டிருக்கும் உள்குத்துக்களுமாக பார்த்தால், இரு தேசிய கட்சிகளுக்கும் தெற்கில் மிகப்பெரிய பின்னடைவு காத்துக் கொண்டிருக்கிறது. 26/11 பிரச்சனையில், பா.ஜ.க தன்னை ஒரு வலுவான அரசாக முன்னிறுத்துகிறது. அணுகுண்டு சோதனை செய்ததும் பா.ஜ.க தான் என்பதும், தீவிரவாதத்தினை ஒடுக்க கடுமையான சட்டங்களை முன்னிறுத்த வேண்டும் என்பதையும் தொடர்ச்சியாக பா.ஜ.க செய்து கொண்டு வருகிறது. ஆனாலும், பா.ஜ.கவின் இந்துத்துவா முகம் தென் மாநிலங்களில் பெரிய speed breaker.

இது தவிர, இன்றைக்கு உலகம் இருக்கக்கூடிய சூழலில் மக்கள் ஒரு சிக்கலான கூட்டணி அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட எண்ணம். ஒரு வலுவான, இந்தியாவினை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரு கட்சியினை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்கு இந்தியாவினை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகள் என்பது பற்றிய பிரச்சனைகள் கீழே. இதை முன்னோடியாய் வைத்தும், மாநிலங்களில் இருக்கும் பெரும் பிரச்சனைகளையொட்டியே வாக்களிப்பு இருக்கும்.

  • பொருளாதார தேக்கம் / வேலை வாய்ப்பு
  • தீவிரவாத அச்சுறுத்தல்
  • பணப்புழக்கம்
  • மாநிலங்களில் ரீதியில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தல்
  • உணவுப் பொருட்கள் விலையுயர்வு/வீழ்ச்சி
  • விவசாயிகளின் பிரச்சனைகள்

இது தவிர தமிழகத்தில் ஈழப்பிரச்சனையும், ஆந்திராவில் தெலுங்கானாவும், மேற்கு வங்கத்தில் தொழில் வளம் சார்ந்த பிரச்சனைகளுமாக மாநிலரீதியிலான பிரச்சனைகளுக்கு மக்கள் கண்டிப்பாக முதலிடம் கொடுப்பார்கள். கூட்டணி அரசு எப்படி செயல்படும் என்பது கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். தமிழகத்தின் தொழில் வளமும், ஆந்திராவின் பணப்புழக்கமும், பீஹாரின் போக்குவரத்து முன்னேற்றமும், மஹாராஷ்டிராவின் வர்த்தகமும் எந்தளவிற்கு ஆளும் கூட்டணியில் இருந்த்தால் நிகழ்ந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆகவே இந்தமுறை இந்த ரீதியிலான அணுகுமுறையோடு தான் மக்கள் தேர்தலை சந்திப்பார்கள் என்று தோன்றுகிறது.

காங்கிரஸ் அலை வீசுகிறதா?

with 2 comments

இன்றைய எகனாமிக் டைம்ஸ் தினசரியில் எம்.கே.வேணு, காங்கிரஸ் முன்னிறுத்தும் யு.பி.ஏ விற்கு சாதகங்கள் அதிகம் என்று எழுதியிருக்கிறார். அவர் எழுதியதன் சாராம்சமும் என் பார்வைகளும் கீழே.

சாராம்சம்

இந்தியாவின் ஒட்டுப் போடும் மக்கள் தொகை சராசரியாக 67 கோடி. இதில் 55% 6 மாநிலங்களில் இருக்கிறது – உத்தரப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா, பீஹார், மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு. இந்த 6 மாநிலங்களில் 291 தொகுதிகள் (மொத்தம் 545) இருக்கின்றன. பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகளை விட இன்றைக்கு முக்கியமாக தேசிய ஆட்சியினை நிறுவும் அதிகாரத்தில் இருக்கின்றன. இம்மாநிலங்களில் நிலவும் மாநில அரசியல், சர்ச்சைகள், மாநில அளவிலான பிரச்சனைகளை சார்ந்து பார்த்தால், காங்கிரஸிற்கே சாதகமான நிலையுள்ளது.

சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸை நம்பி தான் ஆக வேண்டும். இல்லாவிடில் மாயாவதியினை தூக்கியடிக்க முடியாது. இப்போதிருக்கும் சூழலில் சமாஜ்வாடி கட்சி 35 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறது (மொத்தம் 80/81 தொகுதிகள்). இப்போதிருப்பதை அப்படியே தக்கவைத்து கொண்டு காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்தால் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றும் சாத்தியங்கள் இருக்கின்றன.மஹாராஷ்டிராவில் சரத் பவாரின் என்.சி.பிக்கும் இதே மாதிரியான ஒரு நிலைமை உள்ளது. தமிழகத்தில் தி.மு.க தலைமையின் மீதும் அசையாத நம்பிக்கை காங்கிரஸுக்கு இருக்கிறது.

மன்மோகன் சிங்கினை முன்னிறுத்தி, இப்போதிருக்கும் அரசியல்/பொருளாதார பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும் என்று காங்கிரஸ் திடமாக நம்புகிறது. ஒரு பொருளாதார வல்லுநரின் தலைமையில் நாடு இருந்தால், இப்போது இருக்கும் உலகளாவிய பொருளாதார சிக்கலிலிருந்து நாட்டினை முன்னேற்ற, சிக்கல்களை களைய முடியும் என்கிற வாதத்தினை காங்கிரஸ் முன்வைக்கிறது. இப்போதே காங்கிரஸ் தன் கூட்டணி கட்சிகளோடு தொகுதி உடன்பாடு நடவடிக்கைகளில் இறங்க தொடங்கியிருக்கிறது. தேசிய அளவில் நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு என்கிற இரட்டை அஸ்திரங்களில் மூன்றாவது அணி பலவீனமாக இருக்கும். அந்த ஸ்திரத்தன்மை, பாதுக்காப்பினை தான் இரண்டு தேசிய கட்சிகளும் முன்வைக்கின்றன. காங்கிரஸுக்கு இன்னொரு பலமான விஷயம், பா.ஜ.க போல அதற்கு மத சாயம் இல்லாமலிருப்பது. மதச்சார்ப்பின்மை என்பதே காங்கிரஸின் இன்னொரு சீட்டாக முன்வைக்கப்படும்.

கெனிஷிய தியரி தான் இன்றைக்கு உலகமுழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார விடிவாக பார்க்கப்படுகிறது. மன்மோகன் சிங் ஒரு கெனிஷியவாதியாக பார்க்கப்படலாம் கடந்த திட்ட கமிஷன் கலாந்தாய்வில் கலந்து கொண்ட, நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிகில்ட்சு சொன்னது “ இன்றைக்கு வலது சாரி என்று யாருமேயில்லை. எல்லோரும் கெனிஷிய தியரியினை எப்படி இடம்பெற செய்யலாம் என்பதில் தான் போட்டி போடுகிறார்கள்”.

ஒரு வேளை, தேர்தல் முடிந்து மீண்டும் கம்யுனிஸ்டுகள் ஒன்றாக சேரலாம் என்கிற பட்சத்தில், ஒரு குறைந்த பட்ச செயல்திட்டத்தினை வைத்துக் கொண்டு, காங்கிரஸுக்கு அதுவும் சாதகமாக முடியும்.

என் பார்வை

மேற்சொன்ன வகையில் பார்க்கும் போது கண்டிப்பாக காங்கிரஸிற்கு சாதகமே. ஆனால், மக்களின் மனதில் தொடர்ச்சியாக ஒரு anti-incumbency விஷயம் ஒடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு சிக்கலான மனநிலை.

மாநிலங்களின் பலத்தினை வைத்து கொண்டு தான் நரசிம்மராவ் தொடங்கி மன்மோகன்சிங் வரையிலான கூட்டணி அரசுகள் ஆட்சிபுரிந்திருக்கின்றன. மாநிலங்கள் / பிராந்திய கட்சிகள் இன்றைக்கு தேசிய அளவிலான அரசியல்/சமூகம்/பொரூளாதாரம் ரீதியிலான அச்சுறுத்தல்களையும், சாதகங்களையும் அளிக்கின்றன. முக்கியமாக தெற்கில் பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகளை விட அசுர பலத்தோடு இருக்கின்றன. கர்நாடகாவில் பா.ஜ.கவும், ஆந்திராவில் காங்கிரஸும் ஆண்டாலும், அதற்கு இணையான பலம் பிராந்திய கட்சிகளால் மட்டுமே பெற முடிகிறது.

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஒரு தேசிய கட்சியும் வெற்றி பெற முடியவில்லை. கேரளாவில் காங்கிரஸும், கம்யுனிஸ்டுகள் மாறி மாறி ஆட்சியமைத்திருக்கிறார்கள். ஆந்திரா, கர்நாடகாவிலும் இதே நிலை. அப்படி பார்க்கையில், பா.ஜ.கவினை விட காங்கிரஸிற்கு தெற்கில் செல்வாக்கு அதிகம். ஆக இது ஒரு சாதகமான பார்வை. தற்போதைய ராஜஸ்தான்,டெல்லி வெற்றிகளும் காங்கிரஸிற்கு ஊக்கத்தினை கொடுத்திருக்கிறது. ஆனால் தெற்கில் அவர்கள் வைத்திருக்கும் கூட்டணி அரசுகள் மீது கடுங்கோவமும், எரிச்சலோடும் மக்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை (உ-ம் ஆந்திரா, தற்போதைய தமிழ்நாடு). பா.ஜ.க தெற்கிலிருக்கும் செல்வாக்கு மிகக் குறைவு. பா.ஜ.கவினை விட கம்யுனிஸ்டுகளுக்கு தெற்கில் செல்வாக்கு அதிகம்.

ஆகவே சாதகங்கள் அதிகமிருந்தாலும் its too early to predict the voters’ mind.

Disclaimer: தமிழீழ பிரச்சனையில் தனிப்பட்ட ரீதியில் எனக்கு தி.மு.க அரசு மீதும், மத்தியில் ஆளும் காங்கிரஸின் யு.பி.ஏ மீதும் கடுங்கோவமும், அவர்கள் தூக்கி எறியப்படவேண்டும் என்கிற ஆதங்கமும் இருக்கிறது. ஒரு விமர்சகனாக என்னுடைய பார்வை என்றைக்கும் உண்மை நிலவரத்தினை ஒத்ததாகவே இருக்கும்.
Follow

Get every new post delivered to your Inbox.